Latest Updates

Categories Post

தமிழர்களுக்கான சர்வதேச உதவிகளை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது! விக்னேஸ்வரன், ஜேர்மனிய தூதுவரிடம் முறையீடு

சர்வதேச நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் நேற்று தம்மை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்த ஜேர்மனிய தூதுவர் ஜுர்ஜன் மொர்ஹாட்டிடம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இருவரும் தமது சந்திப்பின் போது அரசியல், அபிவிருத்தி உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இதன்போது போரினால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கு மக்களின் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு வெளிநாட்டு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் அதனை அரசாங்கம் கட்டுப்படுத்தி வருவதை தாம் ஜெர்மனிய தூதரிடம் சுட்டிக்காட்டியதாக விக்னேஸ்வரன் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில் முறைப் பயிற்சிகளினை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் ஜுர்ஜன் மொர்ஹாட் என்னிடம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கிற்கு ஜேர்மன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களைப் போல ஊவா மாகாணத்திற்கும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவரிடம் அரசாங்கம் கேட்டதாகவும், அதற்கு அவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அவை முடிக்கப்பட்ட பின்னர் ஊவா மாகாணத்திற்கான உதவிகள் பற்றி தீர்மானிக்கப்படும் என அரசாங்கத்திற்கு பதிலளித்ததாக அவர் எனக்குக் கூறினார்.

ஜேர்மன் அரசாங்கத்திற்கும் வடமாகாண மக்களுக்கும் நெருங்கிய உறவுகள் காணப்படுவதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

அத்துடன் இங்கு வாழ்வாதார ரீதியிலான உதவிகள் முன்னெடுக்கப்படும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், வடமாகாணத்திற்கு சர்வதேசத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்துகின்றதாக நான் அவரிடம் தெரிவித்திருந்தேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 Response to "தமிழர்களுக்கான சர்வதேச உதவிகளை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது! விக்னேஸ்வரன், ஜேர்மனிய தூதுவரிடம் முறையீடு"

Post a Comment