Latest Updates

Categories Post

மன்னார் மனிதப் புதைகுழி புராதன மயானமாம்!



மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட  பிரதேசம், புராதன மயானம் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவு பணிப்பாளர், நாமல் கொடிதுவக்க கூறியுள்ளார்.

தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஷ்ட அகழ்வாராய்ச்சியாளரான ஏ.ஏ.விஜேரத்னவும் இந்த பரிசோதனையில் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மயானம் சுமார் 100 அல்லது 150 வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த பகுதியில் இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து உடல்களும் மேற்குத் திசையில் தலைப்பகுதி இருக்கும் வகையிலும், உடல்களின் கைகள் வயிற்றின்மீது வைக்கப்பட்டும் புதைக்கப்பட்டுள்ளன.  எனவே, புதைக்கும்போது சம்பிரதாயபூர்வமான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளமை அப்பகுதி மயானம் என்பதை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அருகில் கோயில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டமையே மயானம் கைவிடப்பட்டமைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பிரதேசம் தொடர்பான தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கை நேற்று (06) மன்னார் நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Response to "மன்னார் மனிதப் புதைகுழி புராதன மயானமாம்!"

Post a Comment