Latest Updates

Categories Post

அக்கரைப் பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப் பகுதி மக்கள் சந்தித்து தமது அடிப்படைத் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி சந்திப்பு இன்றைய தினம் (3) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குடிதண்ணீரை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்த போது விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் விரைவுபடுத்தி செயற்படுத்துமாறு துறைசார்ந்தோருக்கு அமைச்சர் அவர்கள் தொலைபேசியூடாக பணிப்புரை வழங்கினார்.

அத்துடன், குறித்த பகுதியில் மலசலகூடங்களின் தேவைகள் தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைக்கு தெரியப்படுத்தியுள்ள போதிலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றவுடன் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்த அமைச்சர் அவர்கள், காணிகள் இல்லாத மக்களுக்கு அப்பகுதியிலுள்ள பொதுக்காணிகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

தொண்டமனாறு அக்கரை கடற்கரைப்பகுதியில் வான் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் மற்றும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக மின்சார விநியோகத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்திட்டங்களும் உரிய காலத்தில் துறைசார்ந்தோர் ஊடாக முன்னெடுக்கப்படும்.

இதனிடையே நீண்டகாலமாக புனரமைக்கப்படாதுள்ள வீதிகளை புனரமைத்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்த போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், மத்திய அரசின் கீழான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க முடியுமென்றும் வீதிப்புனரமைப்பு மாகாண சபையின் கீழ் உள்ளதால் அவர்களே அதனை செய்ய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஏனைய தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. 

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1986 ம் ஆண்டு குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட பாரிய முயற்சியின் பயனாக 2013 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன், ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச இணைப்பாளர் ஐங்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.


0 Response to "அக்கரைப் பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்"

Post a Comment