Latest Updates

Categories Post

நாவற்குழி இராணுவ அதிகாரி துமிந்தவே எனது பிள்ளைகளைக் கடத்திச் சென்றார்

துமிந்த என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் நடைபெற்ற சுற்றிவளைப்பிலேயே
என் மகன் காணாமல் போனார் அவரைக் கேளுங்கோ எங்க பிடிச்ச பிள்ளைகள் எண்டு ஏன் எங்களை இப்பிடி கேள்வி எல்லாம் கேட்கிறியள் என தந்தையார் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் கண்ணீருடன் சாட்சியமளித்தார்
.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப்பதிவுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டு இன்று சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது .

இதன்போதே சாட்சியத்திற்காக அழைக்கப்பட்ட தந்தையார் ஒருவர் இவ்வாறு சாட்சியம் அளித்தார் .

அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில் ,

நாவற்குழி இராணுவ அதிகாரியின் தலைமையில் கடந்த 1996.07.19 மறவன்புலவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் எனது மகன்கள் இருவர் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு தலையாட்டிமுன் நிறுத்தப்பட்டனர் .

ஒரு மகன் வீட்டில் நிற்கும் போது சுற்றிவளைப்பில் பிடிக்கப்பட்டதுடன் மற்றைய மகன் வயலில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அன்றைய தினமே பிடிக்கப்பட்டார் .

அவ்வாறு தலையாட்டியினால் அடையாளம் காட்டப்பட்டவர்களில் எனது மகன்மார் இருவரும் அடங்குவர் .

அவர்களைப்பிடிச்ச உடன நாங்களும் ஓடிப்போய் பிள்ளைகளோட நிண்டம் எங்களுக்கு அடிபோட்டு கலச்சிட்டாங்கள் .

பிள்ளைகளை விட்டு வீட்டை போகேலாமல் ரோட்ல நிண்டம் ஆனா ஆமி பிள்ளையள விடேல . எங்கட கண் முன்னதான் பிடிச்சு ஏத்திட்டு போனவங்கள் நாங்கள் அழுதிட்டு வீட்டுக்கு வந்தம் .

பிறகு 3 நாள் காம்பில போய் கேட்டம் . விசாரிச்சிட்டு விடுறம் எண்டினம் பிற்கு வரவேண்டாம் எண்டே சொல்லிட்டினம் .

பிறகு எல்லா இடமும் தேடி ஒரு தகவலும் இல்லை . இப்ப எனக்கு கண்பார்வையும் குறைவு . வாழ்க்கை நடாத்திறதுக்கே கஸ்ரமாய் இருக்குது எங்களை இப்பிடி கேள்வி கேட்காமல் அந்த ஆமி கொமாண்டரையே எங்க பிடிச்ச எங்கட பிள்ளையள் எண்டு கேளுங்கோ என்றார் .

மேலும் அன்றைய தினம் பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர் சாட்சியத்தில் தெரிவித்தார் .

இதேவேளை இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பல உறவுகள் நாவற்குழி இராணுவத்தளபதியாக 1996 ஆம் ஆண்டு கடமையாற்றிய துமிந்த என்ற இராணுவ அதிகாரியே தங்கள் பிள்ளைகள் காணாமற் போனதுக்கு காரணம் என சாட்சியம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

0 Response to "நாவற்குழி இராணுவ அதிகாரி துமிந்தவே எனது பிள்ளைகளைக் கடத்திச் சென்றார்"

Post a Comment